வாழ்வில் பாடல்களுக்கான இடம் இன்னது என வரையறுத்துவிட முடியாது.தன்னைத் தாலாட்டிய பாடலை வாழும் காலமெல்லாம் நேசத்தைக் கொட்டிப் போற்றிக் கொண்டே இருக்கத் தலைப்படுவது இசை மீதான ரசனை.பிடித்த பாடல்களைப் பற்றிப் பேசுவதிலிருந்து அன்பின் இணக்கமான சன்னல் ஒன்று திறந்து கொள்கிறது. திரைப்படப் பாடல்கள் நம் ஞாபககாலத்தின் பின்னணி இசையாகவே ஒலிக்கின்றன.அவரவர்க்கான முடிவுறா திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்கள் நிரம்புகின்றன.இசையைப் பற்றி எழுதுவது ஒரு நிஜமான கனவை அடுத்தவர்களுக்கு விவரிக்கிற கணத்தின் உணர்தலைப் போன்றது.ஆத்மார்த்தியின் புலன் மயக்கம் அதன் அத்தனை சாத்தியங்களையும் அலசுகின்றது.