ஆரம்பகால சினிமா தொடங்கி இன்றைய காலகட்டம் வரை தமிழ் சினிமா உருவாக்கித் தந்திருக்கும் ஆளுமைகளின் எண்ணிக்கை அபரிமிதமானது. ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களோ, குறிப்புகளோ போதுமான அளவுக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த ஏக்கத்தை நாற்பதாண்டு கால அனுபவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் பி.எல்.ராஜேந்திரன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் பெருமளவு தீர்த்துவைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் உருவாக்கத்திலும் விரிவாக்கத்திலும் பங்களிப்பு செய்த அந்தக் கலைஞர்கள் பற்றிய நுணுக்கமான பல தகவல்களைக் கொண்டு இந்தப் புத்தகத்தில், வியப்பூட்டும் பல செய்திகளை வெகு இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
புகழ்பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் ப வரிசைப் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றவை என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் பீம்சிங்கின் பழனி என்ற படம் தோல்விப் படம்.
ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் அற்புதமான எழுத்தாளரான புதுமைப்பித்தன் எழுதிய வசனங்கள் இடம் பெறவில்லை.
பெரு வெற்றியைப் பெற்ற மனோகரா படத்தில் சிவாஜிக்கு முன்பு நடிக்க இருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி.
இப்படி இன்னும் இன்னும் பல சுவாரஸ்யத் தகவல்களை இந்தப் புத்தகத்தில் கண்டெடுக்கலாம். ஆச்சரியங்களுக்கு மட்டுமல்ல, அதிர்ச்சிகளுக்கும் ஆங்காங்கே இடமிருக்கிறது.
தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் பொருத்தமான ஒன்று!
No product review yet. Be the first to review this product.