பிறகு என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். தடிக்கம்புகளால் என்னுடைய முதுகு, புட்டம், பின்னங்கால், தொடை, கணுக்கால், பாதம் என்று பல இடங்களில் சீராகவும், ஒருவித லயத்தோடும் அடித்தார்கள். முதலில் வலி பயங்கரமாக இருந்தது. பிறகு தாங்க முடியாததாக மாறியது. கடைசியில், அந்த இடங்களில் உணர்வே இல்லாமல் போனது. ஆனால் அடியை நிறுத்தியதும் வலி திரும்பியது. இது போதாதென்று காயங்களோடு ஒட்டிக்கொண்டிருந்த என் சட்டையைக் கிழித்தெறிந்துவிட்டு சதையில் மின்கம்பியை வைத்து ஷாக் கொடுத்தார்கள். இது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. சமயங்களில் இரண்டையும் சேர்த்தே செய்தார்கள். தண்டனை கொடுக்காத நேரங்களில் அவர்கள் என்னை ஒரு கொக்கியில் மாட்டித் தொங்க விடுவார்கள். சமயங்களில் என்னைச் சித்ரவதை மேஜையில் கிடத்தி கைகளிலும் கால்களிலும் இரண்டு மெஷின்களைப் பொருத்தி எதிரெதிர்த் திசைகளில் இழுப்பார்கள். என் கண்கள் எப்போதும் கட்டப்பட்டிருக்கும் என்பதால் அந்த மெஷின் எப்படியிருக்கும் என்று நான் பார்த்ததில்லை. ஆனால் அந்த மெஷின் என்னைப் பிய்த்துப் போடப் போவது போல் படுபயங்கரமாக இழுக்கும்.
No product review yet. Be the first to review this product.