2006 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் 1970 களில் இருந்து 2016 வரையான காலப்பகுதியைக் கொண்டியங்குகின்றன. இந்தக் காலவெளியில் ஈழத்திலும் ஈழத் தமிழர்கள் ஊடாடும் பிற புலங்களிலும் அவர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் சந்தித்த சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கை நெருக்கடிகளே இந்தக் கதைகளின் பொருள்மையம். அதிலும் கூடுதலான கதைகளில் பெண்களுடைய பிரச்சனைகளே பேசப்படுகின்றன. சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்கள் எப்படியெல்லாம் ஆண் நிலைச் சமூகத்தினால் பாதிப்படைகிறார்கள். சுரண்டவும் அடக்கவும் படுகிறார்கள் என்பதைக் கவனப் படுத்தியிருக்கிறார் சாத்திரி. கதைகளின் மையபாத்திரமே பெண்கள்தான். இதில் 'கைரி' என்ற கதை இந்தத் தொகுதியின் ஆன்மா எனலாம். மிக எளிய அடிநிலைப் பெண் ஒருத்தி, சமூக (சாதி) ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலிகொள்ளப்படுவதைச் சாத்திரி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தக் குற்றமும் செய்யாத, குற்றங்களையே விரும்பாத ஒரு முதிய கூலிப் பெண் எப்படி அரசியல் படுகொலை ஒன்றில், அநியாயமாகப் பலியிடப்படுகிறார் என்பதையும் ஆயுதம் தூக்கியவர்கள் எப்படியெல்லாம் தீர்ப்புகளை வழங்கினார் என்பதையும் சாத்திரி எதார்த்தமாக விளக்கி விடுகிறார்.